/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
/
போலி சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
போலி சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
போலி சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
ADDED : மார் 07, 2026 05:37 AM
புதுச்சேரி: சென்டாக் மருத்துவ கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சென்டாக் மூலம் கடந்த 2004-05ம் ஆண்டு புதுச்சேரி மாணவர்கள் இட ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், சிவபூஷணம் என்பவர் தனது மகன் மற்றும் மகளுக்கு புதுச்சேரி மாநில சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பித்து இருந்தார்.
அந்த விண்ணப்பங்களை பரிசீலணை செய்தபோது, அதில் இணைக்கப்பட்டிருந்த புதுச்சேரி குடியிருப்பு, குடியுரிமை, சாதி சான்றிதழ்கள் மற்றும் பிறந்த பதவில் இருந்த கையெழுத்து மற்றும் முத்திரைகள் போலியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அப்போது சென்டாக் கன்வீனராக இருந்த ரெட்டி, உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். பின், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., மாற்றப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை நடத்தியதில், சிவபூஷணம் கடலுாரை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவரது நண்பர் குமார் மூலம் காரைக்காலைச் சேர்ந்த ராமலிங்கம், கல்யாணசுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உதவியோடு தனது மகன் மற்றும் மகளுக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் போன்று பிறந்த பதிவு, குடியுரிமை, குடியிருப்பு மற்றும் சாதி போலி சான்றிதழ்களை தயாரித்து விண்ணப்பத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சிவபூஷணம், குமார், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், துரை பஞ்சாட்சரம், சிவபூஷணம் மகன், மகள் ஆகியோர் மீது பொய்யான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சல் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், போலி ஆவணம் தயாரித்த சிவபூஷணத்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் உதவி குற்றவியல் வழக்கறிஞர் லோகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாணசுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் இறந்துவிட்டனர். குமார் மற்றும் சிவபூஷணத்தின் மகன், மகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

