/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஜி.ஆர்., உருவ கோலம்: அவரது ரசிகர் அசத்தல்
/
எம்.ஜி.ஆர்., உருவ கோலம்: அவரது ரசிகர் அசத்தல்
ADDED : ஜன 18, 2026 06:41 AM

பாகூர்: ஓய்வு பெற்ற புதுச்சேரி சட்டசபை பாதுகாவலர், தனது வீட்டு வாசலில், எம்.ஜி.ஆரின் உருவத்தை, கோலமாக போட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 109 வது பிறந்த நாளையொட்டி, நேற்று பல்வேறு தரப்பினரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், எம்.ஜி.ஆரின் ரசிகர் ஒருவர், தனது வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர்., உருவத்தை கோலமாக போட்டு மரியாதை செலுத்தி உள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் பாதுகாவலராக பணியாற்றி ஒய்வு பெற்ற அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார், 65; என்பவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், மற்றும் நினைவு நாளில், வீட்டு வாசலில் வண்ண கோலமாவு மூலமாக எம்.ஜி.ஆரின் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.
அதன்படி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நேற்று, அவர் தனது மனைவி ராணி, மருமகள் அம்ருதா ஆகியோருடன் சேர்ந்து, அதிகாலை 3:00 மணி முதல் 6:30 மணி வரை, மூன்றரை மணி நேரம் செலவிட்டு வீட்டு வாசலில், எம்.ஜி.ஆர்., உருவத்தை கோலமாக போட்டு அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், 'எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். அவரை நினைவு கூறும் வகையில், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் என் வீட்டு வாசலில், அவரது உருவத்தை கோலமாக போட்டு, விவசாயம், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகள் தொடர்பான அவர் பேசிய வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதி வைப்பேன்.
இதனை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்சியாக செய்து வருகிறேன்.
எனது இந்த முயற்சி, இப்போது உள்ள தலைமுறையினருக்கு எம்.ஜி.ஆர்., குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும்' என்றார்.

