ADDED : பிப் 20, 2025 06:15 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிளைச் சேர்ந்த 2 பேரின் மொபைல் எண்களுக்கு தனித்தனியாக வீடியோ அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை ஏற்றபோது மறுமுனையில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக தோன்றினார். இதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இணைப்பை துண்டித்தனர். பின், அந்த காட்சியை பதிவு செய்து வைத்த ஆன்லைன் மோசடி கும்பல் அதை அவர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர். இதனால் கருவடிகுப்பத்தை சேர்ந்தவர் ரூ.73 ஆயிரமும், கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் 49 ஆயிரம் கொடுத்து பணத்தை இழந்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், பொதுமக்கள் சமூக வலைதளங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதனை சிலர் தவறாக சித்தரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மொபைல் போன் வீடியோ அழைப்புகளை தவிர்ப்பது நல்லது. புதிய எண்களில் வரும் அழைப்புகளை எக்காரணம் கொண்டும் ஏற்க வேண்டாம். ஒருவேளை அந்த அழைப்பை எடுத்து, அதன் மூலம் யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால் சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். பொதுமக்கள் கவனமுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்' என்றனர்.
