ADDED : ஏப் 13, 2026 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பழைய நாணயங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி முதலியார்பேட்டை நபரிடம் ரூ. 25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர், பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசியவர் உங்களிடம் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு பழங்கால 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தானா என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எதிர் தரப்பினர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ.14 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, அதற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து முதலில் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என, கூறியுள்ளனர்.
இதை நம்பி 25 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகே சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், மூலக்குளத்தை சேர்ந்தவர் போலி ஆன்லைன் டிரேடிங்கில் 20 ஆயிரத்து 436 முதலீடு செய்து ஏமாந்துள்ளார். ரெட்டியபாளையத்தை சேர்ந்தவர் ரூ. 11 ஆயிரத்து 250 என, மொத்தம் 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 57 ஆயிரத்து 186 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
