ADDED : செப் 03, 2026 07:21 PM
சிறந்த ஆசிரியர்களுக்கு உயரிய விருதுகள்... பள்ளிக் கல்வித் துறை பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவிலான சிறந்த ஆசிரியர் விருது பட்டியலை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், 2026ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது மற்றும் கல்வி அமைச்சரின் பிராந்திய விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 21 சிறந்த ஆசிரியர்களின் பட்டியலை பள்ளி கல்வித் துறை இயக்குநர் மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்கள்::
ராதாகிருஷ்ணன் விருது:: ஆரம்பக் கல்விப் பிரிவில், புதுச்சேரி காலாப்பட்டுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமா, காரைக்கால் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் வீரசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் நிலைக் கல்விப் பிரிவில், கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அனுசுயா, காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி தாவரவியல் விரிவுரையாளர் ரவிகுமார் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
முதல்வரின் சிறப்பு விருது:: சிறந்த மொழி ஆசிரியருக்கான விருதை இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் கலைச்செல்வி பெறுகிறார். சிறந்த பெண் ஆசிரியர்களுக்கான பிரிவில் வில்லியனுார்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகா, காரைக்கால், கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மஞ்சுளா, முத்தியால்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வானதி, நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் நித்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளி நுண்கலை ஆசிரியர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் விருது:: பிராந்திய அளவிலான கல்வியமைச்சரின் விருதுகளில் புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஜானகிராமன், சொசைத்தே புரோகஸ்தே அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் லதா, தர்மபுரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மஞ்சுபார்கவி, லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் பார்வதி, முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கலியவரஜா, கல்வே கல்லுாரி பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜவந்திகா ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் கோட்டுச்சேரி சர்வீட் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் செங்கோல் லிலி, அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி விரிவுரையாளர் சிவகுமார் ஆகிய இருவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
மாகே பிராந்தியத்தின் செம்பரா அரசு கீழ் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சிந்து மற்றும் ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த பராம்பேட்டா அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளி முதன்மை ஆசிரியர் நாட்டி சத்ய ஹரி சந்திர ராவ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்விப் பணியில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி, விருதுக்குத் தேர்வாகியுள்ள 21 ஆசிரியர்களுக்கும் நாளை 5ம் தேதி மாலை 5:00 மணியளவில், காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.
