பட்டாசு கம்பெனிக்கு ரூ. 35 லட்சம் நிலுவை: பாப்ஸ்கோ அலுவலகம் 'ஜப்தி' நடவடிக்கை
பட்டாசு கம்பெனிக்கு ரூ. 35 லட்சம் நிலுவை: பாப்ஸ்கோ அலுவலகம் 'ஜப்தி' நடவடிக்கை
UPDATED : ஜூலை 30, 2026 06:50 PM
ADDED : ஜூலை 30, 2026 05:31 PM

புதுச்சேரி: தனியார் பட்டாசு தயாரிப்பு கம்பெனிக்கு ரூ.35 லட்சம் நிலுவைத் தொகை வழங்காததால், பாப்ஸ்கோ அலுவலகத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது. அதில், தீபாவளி பண்டிகையின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பட்டாசுகளை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்கி வருகிறது.
குறிப்பாக, சிறப்பு அங்காடியில் பட்டாசுகள், மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய், சர்க்கரை, ரவை, மைதா, இனிப்புகள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், சிவகாசி தனியார் பட்டாசு கம்பெனியிடம் (சோனி பயர் ஒர்க்ஸ்) 'பாப்ஸ்கோ' நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்தது. அதில், கம்பெனியில் பட்டாசு வாங்கியதற்கான ரூ.25 லட்சத்தை வழங்காமல் நிலுவையில் வைத்தது. இதையடுத்து, கம்பெனி நிர்வாகம் பல முறை பாப்ஸ்கோ நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டும் வழங்கவில்லை.
இதனால், பட்டாசு கம்பெனி கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்துார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், அசல் தொகையான 25 லட்சத்துடன், அதற்கான வட்டியை சேர்த்து மொத்தம் 35 லட்சத்து 32 ஆயிரத்து 318 ரூபாய் வழங்க வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு தீர்வ வழங்கியது.
கோர்ட் உத்தரவிட்டும் பணம் செலுத்தாததால், அந்த பட்டாச கம்பெனி கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தது. அதன்பேரில், மேல் நடவடிக்கைக்காக அந்த வழக்கு புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் கடந்த 2023ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.
இதில், நிலுவைத் தொகையை உடனே வழங்க பாப்ஸ்கோ நிறுவனத்திற்கு புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், நிலுவைத் தொகையை வழங்க நிறுவனம் முன்வராதததால், நீதிபதி ஜெயந்தி பட்டாசு நிறுவனத்திற்கான பணத்தை வழங்க பாப்ஸ்கோ நிறுவன அலுவலகத்தில் உள்ள ஆசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில், கோர்ட் அமீனாக்கள் ஜெய அம்பி, குணாசேகரன், செல்வராஜ் ஆகியோர் நேற்று காலை 11:30 மணிக்கு தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பாப்ஸ்கோ அலுவலகத்திற்கு வந்து ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாப்ஸ்கோ நிர்வாகத்தின் உதவி பொது மேலாளர் குருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் இன்று (30ம் தேதி) பிற்பகல் 3 மணிக்குள் நிலுவைத்தொகையைக் கோர்ட்டில் செலுத்தி விடுவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, கோர்ட் அமீனாக்கள் பாப்ஸ்கோ நிறுவனத்திற்கு தற்காலிகமாக அவகாசம் அளித்துவிட்டு, மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, பட்டாசு கம்பெனிக்கான நிலுவைத் தொகை வழங்காதது தொடர்பான வழக்கு இன்று (31ம் தேதி) புதுச்சேரி கோர்ட்டில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
