தனியார் பஸ் உரிமையாளர்களுடன் போக்குவரத்து எஸ்.பி., ஆலோசனை
தனியார் பஸ் உரிமையாளர்களுடன் போக்குவரத்து எஸ்.பி., ஆலோசனை
ADDED : ஜூலை 30, 2026 05:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தெற்கு மற்றும் மேற்கு போக்குவரத்து எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள், ரச்னாசிங், பக்தவத்சலம், இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, செந்தில்குமார், வெங்கடாசலபதி, வேலையன் மற்றும் தனியார் பஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., திவ்யா பேசுகையில் ‘பஸ் டிரைவர்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க கூடாது.
காற்று ஒலிப்பான்களை ஒலித்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது. மொபைல் போன் பேசிக் கொண்டும், அதிக வேகத்துடனும் பஸ்களை இயக்கக் கூடாது’ உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினார்.
கூட்டத்தில், தனியார் பஸ் உரிமையாளர் சார்பில், -புதுச்சேரி – கடலுார் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். இந்திரா காந்தி மற்றும் ராஜிவ்காந்தி சதுக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைளை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சீனியர் எஸ்.பி., திவ்யா உறுதியளித்தார்.
