ADDED : ஆக 23, 2026 05:43 PM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் கொசுவை விரட்ட தீ மூட்டியபோது, ஏற்பட்ட விபத்தில் பெயிண்டர் தீ பிடித்து எரிந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ரெட்டியார்பாளையம், மேரி உழவர்கரை, மேரி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 38; பெயிண்டர். இவருக்கு, காயத்ரி என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய ராஜ்குமார், தினமும் இரவு வீட்டில் கொசுகளை விரட்ட, தின்னரை, தேங்காய் மட்டை மீது ஊற்றி தீ வைத்து புகை ஏற்படுத்தி கொண்டு துாங்குவது வழக்கம். கடந்த 21ம் தேதி காயத்ரி தனது குழந்தையுடன், அவரது தாய் ராஜேஸ்வரி நடத்தி வரும் டிபன் கடைக்கு சென்றாார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார், குடிப்போதையில் தேங்காய் மட்டையில் தின்னர் ஊற்றி தீ மூட்டி, புகை ஏற்படுத்தியபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த அவரது மனைவி காயத்ரி உறவினர்கள் உதவியுடன் ராஜ்குமாரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
