ADDED : ஏப் 19, 2026 06:58 PM

புதுச்சேரி: புதுச்சேரி பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழா நடந்தது.
சீனியர் எஸ்.பி., ராகவ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஸ்டெல்லா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் புனித அந்திரேயா ஆலயப் பங்குத்தந்தை ஜோசப் பால், சென்னை லயோலா பொறியியல் கல்லுாரி ஆராய்ச்சித் துறைத் தலைவர் அனிதா ஜூலியட், தோல் சிகிச்சை நிபுணர் சங்கரதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தாளாளர் பிரடெரிக் 2025-26ம் கல்வியாண்டிற்கான பள்ளியின் சாதனைகள் குறித்த ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 24 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி யோகிதாவிற்கு சிறப்புப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளியில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் நீலா, பாலமுருகன், மங்கையர்க்கரசி, சாந்தி, சதீஷ் மற்றும் சசிகலா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாணவி மிருதுளா நன்றி கூறினார்.

