/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை வதிகள் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்
/
அடிப்படை வதிகள் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்
ADDED : மார் 04, 2026 04:46 AM

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் ராஜிவ் காந்தி நகர், மாணிக்கவாசகர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏம்பலம் தொகுதி, கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி நகர் மற்றும் மாணிக்கவாசகர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
அடிப்படை வதிகள் கேட்டு நகர் பகுதி மக்கள் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:30 மணியளவில் மடுகரை - தவளக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிக்கலாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மறியல் சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தனிடம் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது நகர் பகுதிக்கு சாலை வசதி ஒரு வாரத்தில் ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

