கொள்ளை அடிக்க திட்டம் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
கொள்ளை அடிக்க திட்டம் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
ADDED : செப் 13, 2026 07:03 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், பூத்துறை சாலை சந்திப்பு அருகே கொள்ளை அடிக்க கத்தியுடன் பதுங்கியிருந்த, 2 சிறுவர்கள் உட்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, பூத்துறை சாலை சந்திப்பு அருகே ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது, போலீசாரை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் கத்திகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், திலாஸ்பேட்டை, தேரடி வீதியை சேர்ந்த வேல்முருகன் மகன் விஜய், 22; சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் மூர்த்தி (எ)தட்சிணாமூர்த்தி, 21; வில்லியனுார், அசோக் தியேட்டர் வீதியை சேர்ந்த வேல்முருகன் மகன் கார்த்திக், 21; மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, பூத்துறை வழியாக செல்லும் தொழிலதிபர்கள், வணிகர்களை வழிமறித்து, கத்தியால் தாக்கி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 மொபைல்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் தவிர மற்ற 3 பேர் மீதும் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 3 பேரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவர்கள் 2 பேரையும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
