ADDED : ஆக 16, 2026 05:30 PM
பாகூர்: பாகூர் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர் அடுத்த கிருமாமபாக்கம், புதுத்தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் அஸ்வின், 16; தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், நேற்று காலை 11:30 மணிக்கு தனது நண்பர்கள் 4 பேருடன், கிருமாம்பாக்கம் கெங்காபவாணி கோவில் அருகே உள்ள புறாக்குட்டை குளத்தில் குளித்தனர்.
அப்போது, அஸ்வின் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் முழ்கினர். அதைகண்ட அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அஸ்வினை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கத்தில் அம்மன் கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில், வரும் 21ம் தேதி நடக்கும் தெப்ப உற்சவத்திற்காக குளத்தில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
