ADDED : மார் 24, 2025 04:16 AM
புதுச்சேரி: புதுச்சேரி கவிதைக்களம் சார்பில் புதுக்கவிதை எழுதும் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கவிதைக்களம் அமைப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் தமிழ்மொழி வளம் பெறவும், கவிஞர்களின் கவித்திறன் மேம்படுத்தவும் கவிதைக்களம் மூலம் புதுக்கவிதை எழுதும் போட்டி மாதந்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, கவிதை களம் முதல் போட்டி, வரும் 29ம் தேதி மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. கவிதை போட்டிக்கான தலைப்பு துவங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும். கவிதை 16 வரிகளில் அமைதல் வேண்டும். கவிதை எழுதுவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
போட்டியில், சிறந்த மூன்று கவிதைகள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ. 1000 பரிசாக வழங்கப்படும். முதல் போட்டியின் முடிவு, கவிதைக்களம் 2வது போட்டியில் அறிவிக்கப்படும். தொடர்ந்து, 10 மாதங்கள் போட்டியில் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்படும் நபருக்கு, 'கவிதைத் திலகம்' என்ற பட்டமும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகள், குமுதம் இல்லம், எண்:32, 10வது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி-605 005 என்ற முகவரியில் நடக்கிறது. மேலும், தகவல்களுக்கு 94432 57989 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.