ADDED : அக் 24, 2025 03:04 AM
பாகூர்: ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு 28; ஆட்டோ டிரைவர். ஆட்டோ சங்கத்தில் துணைத் தலைவர் பதவி தொடர்பாகஇவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
இதனிடையே, பாலசந்தர் நான் தான் ஆட்டோ சங்க துணை தலைவர் என்று கூறி, ராஜகுருவை அடிக்கடி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் வாங்குவதும், அவரது ஆட்டோவை எடுத்துச் செல்வதுமாக இருந்தார்.
கடந்த 20ம் தேதி மாலை பாலச்சந்தர், குடிப்பதற்காக ராஜகுருவிடம் பணம் கேட்டுள்ளார். ராஜகுரு பணம் தர மறுத்தார். நேற்று முன்தினம் மாலை சோரியாங்குப்பம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பரை சந்திக்க ராஜகுரு சென்றார். அங்கிருந்த பாலச்சந்தர், ராஜகுருவிடம் பணம் கேட்டால் கொடுக்க மாட்டியா என கேட்டு தாக்கி, பேனா கத்தியால் வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த ராஜகுரு பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாகூர் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பாலசந்தரை தேடி வருகின்றனர்.
