மரம் நட்டால் பசுமை பரப்பு அதிகரிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் கோரிக்கை
மரம் நட்டால் பசுமை பரப்பு அதிகரிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2026 02:41 AM

புதுச்சேரி: இந்திய கட்டிட அமைப்பின் சார்பில், 'பருவநிலை மாற்றத்திற்கான உலகலாவிய அழைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மணவெளி ஈகன் பொறியியல் மையத்தில் நடந்தது.
இந்திய கட்டட அமைப்பின் புதுச்சேரி கிளை தலைவர் திருஞானம் வரவேற்றார். உதவி பொறியாளர் தேவதாஸ் நோக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்ேகேற்று பேசுகையில், 'புதுச்சேரி தற்போது வெப்பநிலை உயர்வு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, குடிநீரில் கடல்நீர் உட்புகுதல், திடக்கழிவு மேலாண்மை, பசுமை பரப்பளவு குறைதல் என ஐந்து முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர் நோக்கியுள்ளது.
சராசரியாக புதுச்சேரியில் ஆண்டிற்கு 0.04 செல்சியர் அளவுக்கு வெப்பநிலை உயர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியின் அதிகபட்சம் வெப்பநிலை 2 செல்சியஸ் உயர்ந்துள்ளது. 2050ல் இது 0.08 செல்சியஸ் வரை உயர வாய்புள்ளது. பருவநிலை மாற்றத்தால் இத்தகைய வெப்பநிலை உயர்வு ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் வாயுக்கள் மற்றும் பசுமை பரப்பளவு குறைவதாகும். 70 சதவீதம் காற்று மாசுடைவதற்கு போக்குவரத்து சாதனங்கள் காரணம். மத்திய அரசும் மாநில அரசும் மானியம் வழங்கியும் மின்வாகனத்தின் பயன்பாடு, மற்றும் சூரிய ஒளிமின்சாரம் பயன்பாட்டில் தேசிய அளவில் புதுச்சேரியில் குறைவாகவே உள்ளது.
ஒரு கிலோ வாட் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தினால் ஆண்டிற்கு 1.5 டன் கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை குறைக்கலாம். புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 600 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றை அறிவியல் முறைப்படி வெளியேற்றாவிட்டால் 20 டன் மீத்தேன் வாயு உற்பத்தியாகும். இது காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியாகும்.
அரசின் முயற்சியால் புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக குவிந்து இருந்த 10 லட்சம் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டதால் 62 ஆயிரம் டன் மீத்தேன் வாயு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற பிரதமரின் திட்டத்தின்படி ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு பராமரித்தால் புதுச்சேரியில் பசுமை பரப்பு அதிகரிக்கும்' என்றார்.
கட்டட அமைப்பின் செயலாளர் கந்தர்செல்வம் நன்றி கூறினார்.
