2,000 வீடுகளுக்கு சூரிய மின்னொளி திட்டம்...இலவசம் : பரிட்சாத்தமாக ஏனாமில் செயல்படுத்த முடிவு
2,000 வீடுகளுக்கு சூரிய மின்னொளி திட்டம்...இலவசம் : பரிட்சாத்தமாக ஏனாமில் செயல்படுத்த முடிவு
ADDED : ஜூன் 24, 2026 02:41 AM

புதுச்சேரி: பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தை பரிட்சாத்தமாக ஏனாமில் 2,000 வீடுகளுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவியுடன் இலவசமாக செயல்படுத்திட புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் தினசரி அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, நாடு முழுக்க ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கிட ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் சூரிய மின்னொளி திட்டத்தை கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தை வரும் 2027 மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவேற்றிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு, திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரம் வீதம் அதிகப்பட்சம் ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கிலோ வாட்டிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தை, புதுச்சேரியில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் 13 ஆயிரம் வீடுகளில் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், மாநிலத்தில் இதுவரை 3,721 வீடுகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.29.92 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 9 மாதங்களில், ஒன்பதாயிரம் வீடுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவிற்குள் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்ட செயல்பாடு குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மின்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, புதுச்சேரியில் 3 கிலோ வாட் சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்திட மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகிறது. அதில், மத்திய அரசு ரூ.78 ஆயிரமும், மாநில அரசு ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.1.08 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. மீதம் 92 ஆயிரம் ரூபாய் நுகர்வோர்கள் செலவிட வேண்டியுள்ளதாகவும், நுகர்வோர் சம்மதித்தால் வங்கி கடனுதவிக்கு ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், ஆந்திர அரசு இத்திட்டத்தை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோரின் வீடுகளில் சூரிய மின்னொளி திட்டத்தை அரசு இலவசமாகவே செயல்படுத்தி வருவதாகவும், இதனால், அந்த அரசுக்கு மின் கொள்முதல் கணிசமாக குறைந்திருக்கும் தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைகேட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆந்திர அரசை பின்பற்றி, பரிட்சாத்தமாக ஏனாம் தொகுதியில் உள்ள தொமுதிபேட், தரியால்திப்பா, கிரியப்பேட்டா மற்றும் சாவித்ரி நகர் ஆகிய நான்கு பகுதிகளில் மாதம் 300 யூனிட் அளவிற்கு மின்சாரம் பயன்படுத்தும் மொத்தமுள்ள 2,000 வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் பெறு நிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவி (சி.எஸ்.ஆர்.,) திட்டத்தின் கீழ் இலவசமாக சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனையொட்டி, இத்திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரித்து, முதல்வரின் அனுமதி பெற்று செயல்படுத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
