/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துறைமுகத் துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை
/
துறைமுகத் துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை
ADDED : மார் 10, 2026 04:41 AM

புதுச்சேரி: சுற்றுலா படகுகளை இயக்கும் மீனவர்களின் கொட்டகைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்த துறைமுகத் துறை இயக்குனர் அலுவலகத்தை, மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மீனவர்கள் சுற்றுலா படகுகளை இயக்கி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் சிறிய அளவிலான கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் அமைத்துள்ள கொட்டகைகளை 15 நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் அரசே அப்புறப்படுத்தும் என துறைமுக துறை சார்பில் சுற்றுலா படகு உரிமையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களும், படகு உரிமையாளர்களும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் துறைமுகத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும், துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் தெரியாமல் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவு ம், இதுபோன்ற கடிதத்தை தான் அனுப்ப சொல்லவில்லை என முதல்வர் கூறியுள்ளதாகவும் தெரிவித்து மீனவர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த கடிதத்தை திரும்ப பெறுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, தற்போது வழங்கிய கடிதத்தை துறைமுகத் துறையினர் உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால் அடுத்த கட்டமாக அனைத்து மீனவர்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

