மாநில அந்தஸ்து கோரி பிரதமரிடம் அழுத்தம்:சட்டசபையில் முதல்வர் உருக்கம்
மாநில அந்தஸ்து கோரி பிரதமரிடம் அழுத்தம்:சட்டசபையில் முதல்வர் உருக்கம்
UPDATED : ஆக 27, 2026 07:56 PM
ADDED : ஆக 27, 2026 07:51 PM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற இதுவே சரியான தருணம். மாநில அந்தஸ்து கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தபோது, மாநில அந்தஸ்து, அதிகாரிகளின் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை என எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது:
புதுச்சேரி மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த காலத்தில் மாநில அந்தஸ்து பெறுவதில் மாற்று கருத்து இருந்தது. ஆனால் தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்.எல்.ஏ.,க்கள், மட்டும் அல்ல அரசு ஊழியர்கள், மக்கள் அறிந்துள்ளனர். எனவே, மாநில அந்தஸ் பெற இதுவே சரியான தருணம்.
மாநில அந்தஸ்து கேட்டு பல பிரதமர்களை சந்தித்து பேசியுள்ளேன். அப்போதெல்லாம் அவர்கள் பார்ப்போம் என கூறுவார்கள்.
பிரதமர் மோடி புதுச்சேரி வந்த போது கூட மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். புதுச்சேரி சிறந்த மாநிலமாக வளர்ச்சி அடைந்து இருந்தாலும், மனதில் ஒரு குறை உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்று நேரடியாகவே தெரிவித்தேன்.
தேவையான நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து தொடர்பாக வலியுறுத்துவேன். எனவே மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக மேலும் அழுத்தம் தர வேண்டும்.
பார்லிமெண்ட் முன்பு மாநில அந்தஸ்து கோரி நேரு எம்.எல்.ஏ., போராட்டம் நடத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். தி.மு.க., எம்பி சிவா பார்லிமெண்ட்டில் குரல் கொடுத்தார். புதுச்சேரி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம். மாநில அந்தஸ்து இல்லாததால் முதல்வர், அமைச்சர்களுக்கு பல சங்கடங்கள் உள்ளன. அனைத்துக்கும் கவர்னரிடம் செல்ல வேண்டியுள்ளது.
கவர்னருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று உறுதி செய்துவிட்டனர்.
கவர்னருக்கு அதிகாரம் என்று உள்ளதால் அரசில் சில நிர்வாக சங்கடங்கள் உள்ளன. அதிகார போட்டி காரணமாக மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்படுகின்றது.
கோப்பு திரும்பி வராமல் பல திட்டங்கள் நிறைவேற்றாமல் உள்ளன. இப்போது கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பாமல் நாங்களே முடிவுகளை எடுத்து வருகிறோம்.
1000 பணியிடங்கள் நிர்வாக சிக்கல்கள் இருந்தாலும், புதுச்சேரி அரசு பணியிடங்களை நிரப்புவதில் உறுதியாக உள்ளோம். கடந்த ஆட்சியில் 4,100 அரசு பணியிடங்களை நிரப்பியுள்ளோம்.
இந்தாண்டு புதிதாக 1000 அரசு பணியிடங்களை நிரப்ப உள்ளோம். புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது கிடைத்துள்ளது.
இந்த விருது பெற்ற காவல்துறைக்கு வாழ்த்துக்கள். காவல் துறையில் புதிதாக ஐ.ஆர்.பிஎன்., வர உள்ளது. இதில் 1000 பணிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
--
