ADDED : செப் 11, 2026 09:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரின் மொபைல் போன் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் உதவி பேராசிரியர் சித்ரா பிதா சகா. இவர் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வருகை தந்தார்.
பல்கலைக்கழக விருந்தினர் அறையில் தங்கியிருந்தார்.
கடந்த 2ம் தேதி அறையின் கதவை பூட்டி விட்டு இரவு சாப்பிட சென்றார். மீண்டும் திரும்பி வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
உடனே சக ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்றார்.
அப்போது குளியலறையின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சித்ரா பிதா சகாவின் இரண்டு பைகள் திருடு போயிருந்தது. அப்போது அறை அருகே ஒரு பை கிடந்தது.
மற்றொரு பையை காணவில்லை. அந்த பையில் விலை உயர்ந்த மொபைல் போன், கைக்கெடிகாரம், பவர் பேங்க், முத்து தோடுகள் உள்ளிட்டவை இருந்தது. அவரது புகாரின்பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
