ADDED : ஆக 17, 2026 09:21 PM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
உழவர்கரை நகராட்சியில், பிறப்பு சான்றிதழ் பதிவின் படி, கடந்த, 2025 ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள், பி.டி.ஐ.எஸ்., செயலி மூலமாகவும், அதற்கு பின் பிறந்தவர்கள் சி.ஆர்.எஸ்., புதிய இணைய வசதி மூலமாகவும் சான்றிதழ்களைப் பெற்று வந்தனர்.
தற்போது, இந்த இரண்டு அமைப்புகளையும் இணைக்கும் தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பி.டி.ஐ.எஸ்., செயலி நிறுத்தப்பட்டுள்ளதால், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதற்கட்டமாக இரு தினங்கள் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை (இன்று) முதல் சான்றிதழ் பதிவிறக்கம் வழக்கம் போல் செயல்படும். மேலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், மீதமுள்ள இணைப்பு பணிகள் இனி வரும் காலங்களில், சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி விடுமுறை நாட்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும்,’ என தெரிவித்துள்ளனர்.
