ADDED : பிப் 16, 2024 07:12 AM
நெட்டப்பாக்கம் : ஏம்பலம் தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்றுவதற்கான மக்கள் போராட்ட குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் கரிக்காலாம்பாக்கம் முருகன் கோவில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு போராட்டக் குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி முழுவதும் பொது தொகுதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்துவது, கடந்த 76 ஆண்டுகளாக தனி தொகுதியாக உள்ள ஏம்பலம் தொகுதியை பொது தொகுதியாக மாற்றாத மத்திய மாநில அரசுகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டிப்பது, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வது மற்றும் கிராமங்கள் தோறும் போராட்டக் குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கரிக்கலாம் பாக்கம் முன்னாள் கவுன்சிலர் சண்முகம், முன்னாள் துணைத் தலைவர் ஆதிமூலம், காங்., பிரமுகர் குமரேசன், ராஜாராம், குப்புசாமி, ஜெயக்குமார், முத்துக்குமரன், ஆறுமுகம், குமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.