ADDED : ஜூன் 02, 2025 10:51 PM

புதுச்சேரி: புதுச்சேரி, தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, 64 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசுகையில், சிறந்த ஆசிரியர்களை நியமித்து கல்வியை கொடுத்து வருகிறோம்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தால் தான் எதிர்காலத்தில் உயர் கல்வியை பெற முடியும் என்ற நோக்கத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., குறித்து ஆசிரிர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், கலை, அறிவியல், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் 10 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்கப்படும்.
பள்ளி துவங்கிய நாளிலேயே சீருடை, பாடநுால் கொடுக்கப்பட்டு வருகிறது. நன்றாக படித்தால், வாழ்க்கையில் முன்னேற்றம், அரசு வேலை பெறலாம், தொழில் துவங்கலாம், இதற்கெல்லாம் கல்வி மிகவும் அவசியம். தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.விழாவில், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்திரகுமாரி, லட்சுமிகாந்தம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
