/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கல்
/
மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கல்
ADDED : பிப் 17, 2024 04:50 AM

திருக்கனுார் : புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு கல்வித்துறை மாணவர்களின் பன்முக முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து மிக்க பால், மதிய வேளையில் உணவு, வாரம் மூன்று நாட்கள் முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிப்பதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் சிறுதானிய பிஸ்கட், மிட்டாய் வழங்கும் திட்டம் துவக்க விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட், மிட்டாய் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தனர்.
இதில், கல்வித்துறை செயலாளர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, இயக்குனர் பிரியதர்ஷினி, மதிய உணவுத் திட்ட துணை இயக்குனர் கொஞ்சி மொழி குமரன், இணை இயக்குனர் சிவகாமி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.