/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது
ADDED : ஜூலை 30, 2025 05:59 AM

புதுச்சேரி : தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்களிடம் முதல்வர் ரங்கசாமி நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்படாததால், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் 354 நிரந்தர ஊழியர்கள், 263 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் நேற்று முன்தினம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.
நேற்று 2வது நாளாக பஸ்களை பனிமனைகளில் நிறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி அழைப்பின் பேரில், பி.ஆர்.டி.சி., ஒருங்கிணைந்த போராட்ட குழு நிர்வாகிகள் வேலையன், ராஜேந்திரன், பாஸ்கரன், முத்துக் குமரப்பன், இளங்கோ, ஜெயசீலன், கார்த்திகேயன், தமிழ்ச்செல்வம், பிரதீஷ்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் சட்டசபையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், நிரந்தர ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
ஆனால், முதல்வரின் உறுதிமொழியை ஏற்க மறுத்த ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்துள்ளனர்.