/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
"ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யும் பணி புதுச்சேரியில் 6 லட்சம் பேர் பதிந்தனர்
/
"ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யும் பணி புதுச்சேரியில் 6 லட்சம் பேர் பதிந்தனர்
"ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யும் பணி புதுச்சேரியில் 6 லட்சம் பேர் பதிந்தனர்
"ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யும் பணி புதுச்சேரியில் 6 லட்சம் பேர் பதிந்தனர்
ADDED : அக் 05, 2011 01:21 AM
புதுச்சேரியில் 'ஸ்மார்ட் கார்டு' மற்றும் 'ஆதார்' எண் முகாம்களில் இதுவரை 60 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் தற்போது புத்தக வடிவில் உள்ள ரேஷன் கார்டுகளை, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்க குடிமைப் பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான தகவல்களைப் பதிவு செய்ய தொகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.இந்த சிறப்பு முகாம்களில், 'இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு' சார்பில், ஒவ்வொரு தனி நபருக்கும் தனிப்பட்ட முறையில் அடையாள எண் (ஆதார் எண்) வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு மற்றும் அங்க அடையாளங்களைப் பதிவு செய்யும் பணியும் ஒருசேர மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முகாம்களில், ஒவ்வொரு தனி நபரின் கைவிரல் ரேகைகள், கண்ணின் கரு விழிகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த தகவல் திரட்டல் மூலம், ஒரே நபர் இரு வேறு இடங்களில் பதிவு செய்வது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக புதுச்சேரி, மாகி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளின் எண்ணிக்கைக்கேற்ப, ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த முகாம்களில், மாதத்திற்கு சராசரியாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்யப்படுகின்றனர். புதுச்சேரி பகுதியில் நேற்று வரை 60 சதவீதம் (6 லட்சம் பேர்) 'ஸ்மார்ட் கார்டு' மற்றும் 'ஆதார்' எண்ணுக்காகப் பதிவு செய்துள்ளனர். மாகியில் 80 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரி பகுதியில், வரும் நவம்பர் மாதத்திற்குள் இப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 'ஆதார்' எண் வழங்கும் பணி, பிறக்கும் குழந்தை துவங்கி ஒவ்வொரு தனி நபர் சம்பந்தப்பட்டது என்பதாலும், பதிவு செய்த தகவல்களில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாலும், இப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.எனவே, தொகுதிதோறும் ஒரு மையம் கண்டறியப்பட்டு, அங்கு 'ஆதார்' எண்ணுக்கான தகவல்களைத் தொடர்ந்து பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காரைக்கால், ஏனாம் பகுதிகளில் ஸ்மார்ட் கார்டு மற்றும் 'ஆதார்' எண் பதிவு செய்யும் பணியை விரைவில் துவக்கவும், அவற்றை வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.புதிய கணக்கெடுப்பின்படி, புதுச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12 லட்சத்து 44 ஆயிரத்து 464 ஆகும். ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 35 ஆயிரத்து 88 ரேஷன் கார்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது சிறப்பு நிருபர்

