புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் பதவி விரைவில் மாறுகிறது புதியவர்களுக்கு வாய்ப்பு
புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் பதவி விரைவில் மாறுகிறது புதியவர்களுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 29, 2026 05:21 PM
விரைவில் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் பதவி 6 ஆக பிரிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் உள்பட பலர் தோல்வியை தழுவியதால், ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சி வரிசைக்கு தி.மு.க., வந்து விட்டது.
இதேபோன்று புதுச்சேரியில் ‘இண்டி’ கூட்டணியில் 13 தொகுதியில் போட்டியிட்டு நாஜிம், செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் ஆகிய ஐந்து பேர் மட்டுமே வென்றனர். கடந்த முறை 6 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த எண்ணிக்கை புதுச்சேரியில் தற்போது 5 பேராக மாறியது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மாநில அமைப்பாளர் சிவாவும் தோல்வியை தழுவியதால், மாநில அமைப்பாளர் பதவியை பிரித்து கொடுக்க கட்சியில் கோரிக்கை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் ஆதரவாளர்கள் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, புதுச்சேரி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக மாவட்ட செயலாளர் பதவி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட அமைப்பாளர் என, பிரிக்கப்பட்டுள்ளது. 75 மாவட்ட செயலாளர்களின் பதவி 110 ஆக தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அதேபோல், புதுச்சேரியிலும் பிரிக்க தி.மு.க., தலைமை தயாராகி விட்டது. ஏற்கனவே காரைக்காலில் ஐந்து தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் உள்ளார். அதே போன்று மாகே, ஏனாம் 2 தொகுதிகள் உள்பட புதுச்சேரியில் மொத்தமாக உள்ள 25 தொகுதிகளை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என, ஐந்தாக பிரித்து, மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளது.
தற்போது புதுச்சேரி மாநில அமைப்பாளராக 3 முறையாக சிவா, காரைக்காலில் 5 வது முறையாக மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் ஆகியோர் பதவியில் இருந்து வருகின்றனர். தற்போது கட்சியின் புதிய விதிப்படி மூன்று முறைக்கு மேல் அமைப்பாளராக பதவி வகித்தவர்களுக்கு, மீண்டும் அமைப்பாளர் பதவி கிடையாது.
அதனால், காரைக்காலின் 1 அமைப்பாளர் உள்பட புதுச்சேரி மாநிலத்தின் மொத்த 6 அமைப்பாளர் பதவிகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் மாநில அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுபவருக்கு மாநில அல்லது மண்டல அளவிலான கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என, கூறப்படுகிறது.
