/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., வெளிநடப்பு
/
பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று புதுச்சேரி சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்புக்கு அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருஷாத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
'முதல்வராக பொறுப்பேற்றபோது கையெழுத்திட்ட 3 திட்டங்களையே முழுமையாக நிறைவேற்றவில்லை, பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவீர்களா...' என, அன்பழகன் கேள்வி எழுப்பினார். இதை பொருட்படுத்தாமல், முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் இருக்கைக்கு எதிரில் சென்று தர்ணா நடத்தினர். அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்த சபாநாயகர் சபாபதி, 'முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, யாரும் குறுக்கிட்டு பேசக் கூடாது, பிறகு பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது' என்றார்.
'சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வருவது சரியா...' என, கேள்வி எழுப்பிய சபாநாயகர், 'எம்.எல்.ஏ.,க்கள் தங்களது இருக்கைக்கு சென்று அமர வேண்டும்' என, உத்தரவிட்டார்.அ.தி. மு.க., எம்.எல். ஏ.,க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கையில் வைத்திருந்த பேப்பரை அன்பழகன் எம்.எல்.ஏ., கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க் கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

