ADDED : ஜூலை 01, 2026 12:30 AM

வானுார்: கிளியனுார் அருகே ஆயுதங்களை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த புதுச்சேரி ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை, கிளியனுார் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு கிளியனுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்ததில், கத்தி வைத்திருப்பது தெரிந்து. உடன் இருவரும் கத்தியைக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி முருங்கப்பாக்கம் குப்புசாமி மகன் ராஜேஷ், 34; வில்லியனுார், உறுவையாறு ராமச்சந்திரன் மகன் மணிபாரதி, 23; என்பதும், அவர்கள் மீது புதுச்சேரியில் கொலை வழக்குகள் இருப்பதும், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராகி விட்டு, செங்கல்பட்டுக்கு ஆயுதங்களுடன் சென்ற ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.
உடன், இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
