/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு ரூ. 12,700 கோடியில் முழு பட்ஜெட்! திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
/
புதுச்சேரிக்கு ரூ. 12,700 கோடியில் முழு பட்ஜெட்! திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
புதுச்சேரிக்கு ரூ. 12,700 கோடியில் முழு பட்ஜெட்! திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
புதுச்சேரிக்கு ரூ. 12,700 கோடியில் முழு பட்ஜெட்! திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூன் 19, 2024 05:37 AM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., ஆட்சி அமைத்த கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட் மாதத்தில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். அதன்பின்பு ஆட்சிக்கு வந்த காங்., கட்சியும் இதே நடைமுறையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வந்தது. இந்த நிலையில்,என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசில், கடந்தாண்டு 15வது சட்டசபை 4வது கூட்டத்தொடரின் போது 2023--24 நிதியாண்டிற்கான 11,600 கோடிக்கு முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி மார்ச் 13ம் தேதி தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக,மாநிலங்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த திட்ட கூறுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பர். மத்திய அரசு திட்ட செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்தாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. கடந்த பிப்., 24ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட மாதம் வரையிலான செலவினங்களுக்கு, 4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்திற்கான இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் ஜூலை 2வது வாரத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.பட்ஜெட் தாக்கல் தொடர்பான திட்டக்குழு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, தலைமை செயலர் சரத் சவுக்கான், அனைத்து துறை செயலர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு கவர்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது;
எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் இன்றைய கூட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அறிஞர்கள் எப்படி எல்லாம் புதுச்சேரியை முன்னேற்ற வேண்டும் என்பதற்கான கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். மக்களுடைய தேவைகளை எப்படி மனதிலே கொண்டு செயல்பட வேண்டும் என்பதை எடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லா விதமான யோசனைகளையும் பெற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக எழுச்சிமிகு புதுச்சேரி என்பது வெறும் கோஷமாக இல்லாமல் அது நடைமுறையிலும் வெற்றிகரமானதாக மாறப்போகிறது என்ற உணர்வோடு தான் இந்த கூட்டம் இன்று நடைபெற்று இருக்கிறது.
பட்ஜெட் ரூ. 12,700 கோடிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதை எப்படி உயர்த்தலாம் என்பது பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்கள் வந்திருக்கிறது. எல்லா கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு புதிய எழுச்சியை முன்னேற்றத்தை புதுச்சேரி காணப்போகிறது.
எதிர்வரும் பட்ஜெட் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டின் தொடர்ச்சியாக இருக்கும். இலவச அரிசி வழங்குவது குறித்து இந்த கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. தாய்மார்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ப அந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்படும். நானும் முதல்வரும் என்ன கருத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விட அரிசியை வாங்கி பயன்படுத்தும் தாய்மார்கள் என்ன கருத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதை அமல்படுத்தப் போகிறோம்.
சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். என் கருத்தை விட நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுவோர் உச்சநீதிமன்றம் தான் செல்லவேண்டும். மாநில அரசின் கடன் தள்ளுபடிக்கான எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.