UPDATED : ஜூன் 28, 2026 11:49 PM
ADDED : ஜூன் 28, 2026 11:43 PM
புதுச்சேரி: சாலையில் கிடந்த பர்சை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பெயிண்டருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 40; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு செல்லிப்பட்டில் உள்ள கடைக்கு சென்றபோது, சாலையோரம் மணி பர்ஸ் ஒன்று கிடந்தது. அதில், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான மொபைல் மற்றும் ரூ.200 ரொக்கம் இருந்தது. அதைகண்ட தட்சிணாமூர்த்தி உடனடியாக திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் சென்று, மணி பர்சை ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் அந்த மணிபர்ஸ் யாருடையது என அதில் இருந்த மொபைல் மூலம் ஆய்வு செய்தனர். மணி பர்ஸ் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த விநாயகம் மனைவி தமிழ்ச்செல்வி என்பவருடையது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்ச்செல்வியை போலீசார் ஸ்டேஷன் வரவழைத்து, அவரிடம் பர்சில் இருந்த பொருட்கள் சரியாக உள்ளதா என கேட்டரிந்து ஒப்படைத்தனர். மணி பர்சை ஒப்படைத்த தட்சணாமூர்த்தியை, போலீசார் பாராட்டினர்.
