3 மாதங்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: ரங்கசாமியின் புதிய பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு
3 மாதங்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: ரங்கசாமியின் புதிய பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு
UPDATED : ஆக 05, 2026 11:12 PM
ADDED : ஆக 05, 2026 10:52 PM

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தர உள்ள நிலையில், என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே நிலவி வந்த அரசியல் இழுபறிகள் முடிவுக்கு வந்தது. 3 மாத காத்திருப்புக்குப் பிறகு, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்றிரவு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மே மாதம் 13ம் தேதி என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இவர்களுக்கு எந்தத் துறையும் ஒதுக்கப்படாததால் இலாகா இல்லாத அமைச்சர்கள் என்ற அடையாளத்துடனேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜூன் 17ம் தேதி இரண்டாம் கட்டமாக என்.ஆர்.காங்., ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பா.ஜ., ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கும் உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
கடந்த ஜூலை 20ம் தேதி, அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை முறைப்படி தயார் செய்த முதல்வர் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதனின் ஒப்புதலுக்காகப் பரிந்துரைத்தார். இருப்பினும் கவர்னர் மாளிகையிலிருந்து உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படாமல் காலதாமதம் நீடித்து வந்தது.
பா.ஜ., தரப்பில் உள்துறை, தொழில்துறை உள்ளிட்ட பவர்புல் இலாகாக்கள் கேட்கப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமியும் தனது முடிவில் விட்டுக்கொடுக்காமல் இருந்தார். இதற்கிடையே, புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் கொடி விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ளநிலையில், முதல்வர் ரங்கசாமி தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொண்டார்.
நேற்று மாலை 4:30 மணியளவில் கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, திருத்தப்பட்ட புதிய இலாகா பட்டியலை வழங்கினார். அப்பட்டியலுக்கு கவர்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அது தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு 9:15 மணியளவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி நிதி உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை வழக்கம்போல மீண்டும் தன் வசமே தக்கவைத்துக்கொண்டார். பா.ஜ., வின் தீவிர அழுத்தத்திற்குப் பிறகு உள்துறையை அமைச்சர் நமச்சிவாயம் பெற்றுள்ளார். கடந்த ஆட்சியைப் போலவே இவர் முதல்வருக்கு அடுத்தபடியாக 2-ம் நிலை அமைச்சராகத் தொடர்கிறார். மல்லாடி கிருஷ்ணாராவ் 3ம் நிலை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்கு பொதுப்பணித் துறை மற்றும் பா.ஜ., கேட்ட தொழில்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்., அமைச்சர்கள் ராஜவேலு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், சிவக்கொழுந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும், பா.ஜ., அமைச்சர் ராஜசேகரன் வேளாண்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி அரசியலில் சுமார் 85 நாட்களாக நீடித்து வந்த அதிகார பகிர்வு இழுபறியும் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
