'நீட்' அல்லாத படிப்புகளுக்கு 'சீட்' ஓதுக்கீடு:வரைவு பட்டியல் சென்டாக் வெளியீடு
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு 'சீட்' ஓதுக்கீடு:வரைவு பட்டியல் சென்டாக் வெளியீடு
UPDATED : செப் 15, 2026 08:17 PM
ADDED : செப் 15, 2026 08:14 PM
புதுச்சேரி: இளநிலை தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு நடத்தி 6,500 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு சீட் பட்டியலை சென்டாக் வெளியிட்டு ஆட்சேபனைகளை வரவேற்றுள்ளது.
சென்டாக் நீட் தேர்வு அல்லாத இளநிலை தொழிற்கல்வி, கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான 3ம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி வரைவு சீட்டு ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்த விருப்ப முன்னுரிமைகளின் அடிப்படையில் மொத்தம் 6,500 பேருக்கு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு 4,413 மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு 2,087 மாணவர்களுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள்:: மாணவர்கள் தங்கள் லாகின் கணக்கு மூலம் ஒதுக்கீடு விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதில், ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால், இன்று 16ம் தேதி காலை 11:00 மணிக்குள் இணையதளத்தில் உள்ள கிரீவன்ஸ் விருப்பம் மூலம் தெரிவிக்கலாம்.
தற்காலிக பட்டியல்:: பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதித் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னரே மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
கடைசி நாள்:: தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் உரிய கட்டணத்துடன் வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரியின் முதல்வரிடம் நேரில் சென்று சேர வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவுறுத்தல்:: தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியல் தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. இதன் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை உரிமை கோரவோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியாது. எனவே, இறுதித் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியாகி, ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்த பிறகே மாணவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளை அணுக வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்கள் மற்றும் கட்டண விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதள முகவரியையோ அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களையோ தொடர்புகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
