இட ஒதுக்கீட்டு விதிகளில் வருகிறது... மாற்றம்: விளையாட்டுத் துறையில் தீவிரம்
இட ஒதுக்கீட்டு விதிகளில் வருகிறது... மாற்றம்: விளையாட்டுத் துறையில் தீவிரம்
ADDED : ஜூலை 06, 2026 03:02 AM

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பைப் போலவே, விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த விதிகள், தற்போதைய நவீன விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்ப இல்லை என்பதால், அவற்றை மறுசீரமைப்பு செய்ய விளையாட்டுத் துறை முடிவு செய்து, அதற்கான விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
65 விளையாட்டுகள் தற்போது இடஒதுக்கீடு வழங்கும் பட்டியலில் பேஸ்பால், வாள்வீச்சு, நெட்பால், ரக்பி, ரோல்பால், சாப்ட் டென்னிஸ், டிரையத்லான், டென்பின் பவுலிங், செபக் தக்ரா, மல்லர்கம்பம், யோகாசனம், வுசூ, பென்கேக் சிலாட் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுகள் என, 65 வகையான விளையாட்டுகள் உள்ளன.மேலும், சைக்கிள் போலோ, பாடி பில்டிங், மோட்டார் ஸ்போர்ட்ஸ், கயிறு இழுக்கும் போட்டி, டென்னிஸ்பால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒப்புக்கு ஒட்டிக்கொண்டு... இருப்பினும், பட்டியலில் உள்ள பல விளையாட்டுகள் புதுச்சேரியில் போதிய அளவில் விளையாடப்படுவதில்லை. பல விளையாட்டுகளுக்கு மாவட்ட அல்லது மாநில அளவில் கூட போட்டிகள் நடத்தப்படுவதில்லை. ஆனால் பட்டியலில் ஒப்புக்கென பட்டியலில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.
இத்தகைய சூழலில், தேவையற்ற விளையாட்டுகளைப் பட்டியலிலிருந்து நீக்கி, உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பட்டியலை விளையாட்டுத் துறை தீவிரமாக காலத்துகேற்ப ஆய்வு செய்து வருகிறது.
இதனால், தங்களின் விளையாட்டுகள் இந்தப் பட்டியலில் நீடிக்குமா அல்லது நீக்கப்படுமா என்ற கலக்கத்தில் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். விளையாட்டுத் துறை மேற்கொண்டு வரும் இந்த ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த வாரத்திற்குள் புதிய விதிகள் மற்றும் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தயார் நிலை நீட் தேர்வு அல்லாத பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்று, அதன் வரைவுப் பட்டியலை ஏற்கனவே சென்டாக் வெளியிட்டுள்ளது.இருப்பினும் விளையாட்டு வீரர்களுக்கான விதிமுறை மாற்றத்திற்கான சென்டாக் கவுன்சிலிங் நடத்தாமல் காத்திருக்கிறது. எனவே புதிய விதிகள் மற்றும் அரசாணை வெளியானவுடன், அனைத்து மாணவர்களுக்கான கலந்தாய்வை உடனடியாகத் தொடங்குவதற்கு சென்டாக் நிர்வாகம் முழுத் தயார் நிலையில் உள்ளது.
விளையாட்டு மாணவர்களுக்கான அரசாணை தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உயர்கல்வியில் உரிய வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், கல்வி மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
