ADDED : செப் 02, 2026 09:32 PM
புதுச்சேரி: ஓய்வு பெற்ற ஊழியர் வங்கி கணக்கில் இருந்து 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் பக்தவச்சலம், 64; தனியார் நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். முதலியார்பேட்டை, இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி, மொபைல் மூலம் ஒருவர் பேசினார். அதில், வங்கியில் இருந்து பேசுவதாகவும், வங்கி கணக்கு தொடர்பாக வாடிக்கையாளர் ஐ.டி., எண்ணை கேட்டனர். அதை கொடுத்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 1.10 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
வங்கியை அனுகி அவர் விபரத்தை கேட்டபோது, அது போன்று யாரும் பேசவில்லை என தெரிவித்தனர். மொபைலில் பேசிய நபர் மோசடி கும்பல் என தெரியவந்தது. இதுகுறித்து, பக்தவச்சலம் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
