ADDED : செப் 02, 2026 09:22 PM
புதுச்சேரி: ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் பணிபுரியும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், பிரெஞ்சு பாடங்கள் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் இடமாறுதல் நடத்துவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி பிராந்தியதிற்கு செப்டம்பர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆசிரியர் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் தயாரான நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறு அட்டவணை பின் வெளியாகும் எனவும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
என்ன காரணம்:
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியானதும் இந்த முறை கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கல்வியாண்டு துவங்கும் ஏப்ரல் மாதத்தில் செய்து இருக்கலாம். அதைவிட்டு இன்னும் ஒரு மாதத்தில் பாடமே நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஏன் இப்போது ஆசிரியர் இடமாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் மனநிலை, படிப்பு என்ன ஆவது என கேள்வியும் எழுந்தது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் சட்டசபையில் கேள்வி எழுப்பி, அரசின் கவனத்தை ஈர்த்து இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
