ADDED : மே 17, 2025 12:17 AM
புதுச்சேரி: பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து புதுச்சேரி நபர் 1.53 லட்சம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
கோரிமேட்டை சேர்ந்த நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி, பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் பல்வேறு தவணைகளாக மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தார்.
பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், வைத்திகுப்பத்தை சேர்ந்த நபர் 55 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்தவர்கள் 20 ஆயிரம், 48 ஆயிரத்து 450, உருளையன்பேட்டைச் சேர்ந்தர்கள் 5 ஆயிரம், 10 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 12 ஆயிரத்து 500 ரூபாய் என, மொத்தம் 7 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 950 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.