/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதி நிறுவன அதிபரிடம் ரூ.34 லட்சம் 'அபேஸ்'
/
நிதி நிறுவன அதிபரிடம் ரூ.34 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 14, 2025 11:37 PM
புதுச்சேரி, : நிதி நிறுவன அதிபரிடம் 34 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன், 40; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் நீடராஜப்பையர் வீதியை சேர்ந்த உப்புலியப்பன் என்பவர் குடும்ப செலவு மற்றும் தொழில் செய்வதற்காக கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை பல தவணைகளாக 39 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.அதற்கு அடமானமாக பனித்திட்டில் உள்ள நிலத்தின் அசல் பத்திரத்தை கொடுத்துள்ளார்.
அவரால் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்த முடியாததால், சரவணன் அவருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் கொடுத்து, பனித்திட்டில் உள்ள இடத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதற்கிடையே, உப்புலியப்பன் வாங்கிய பணத்தில் 10 லட்சம் ரூபாயை, சரவணனிடம் திருப்ப கொடுத்ததுடன், அந்த இடத்திற்கு புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தின் அனுமதி கிடைக்கவில்லை என கூறி, காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில், தனக்கு எழுதி தருவதாக கூறிய இடத்தை, உப்புலியப்பன் அவரது மனைவியின் பெயருக்கு மாற்றியது, சரவணனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் பெரியக்கடை போலீசில் அளித்த புகாரில், தொழில் செய்ய 34 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடியில் ஈடுபட்டதாக உப்புலியப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.