ரூ. 37.29 லட்சத்தில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 37.29 லட்சத்தில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 02, 2026 05:41 PM
பாகூர்: பாகூர் தொகுதியில், 37 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் சாலை மற்றும் வாய்க்கால் துார்வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் அருணாச்சலம் நகர், காந்தி நகர் பகுதியில், 22 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில், சாலை அமைத்தல், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், பாகூர் தொகுதி சித்தேரி முதன்மை நீர்வரத்து வாய்க்காலை 6.93 லட்சம் ரூபாய் செலவிலும், கீழ் பரிக்கல்பட்டு தாங்கள் கலிங்கல் முதல் மூர்த்திக்குப்பம் மதகு வரை நீர்வரத்து வாய்க்காலை 8.08 லட்ச ரூபாய் செலவில் துார்வாரிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலை பொறியாளர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.
