/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புயல், மழை பாதிப்பை சரி செய்ய... ரூ.600 கோடி தேவை ; பிரதமர், உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
/
புதுச்சேரியில் புயல், மழை பாதிப்பை சரி செய்ய... ரூ.600 கோடி தேவை ; பிரதமர், உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
புதுச்சேரியில் புயல், மழை பாதிப்பை சரி செய்ய... ரூ.600 கோடி தேவை ; பிரதமர், உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
புதுச்சேரியில் புயல், மழை பாதிப்பை சரி செய்ய... ரூ.600 கோடி தேவை ; பிரதமர், உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ADDED : டிச 06, 2024 06:26 AM
புதுச்சேரி: புதுச்சேரி புயல், மழை சேதத்தை பார்வையிட மத்திய குழுவினை அனுப்புவதோடு, முதற்கட்டமாக 600 கோடி வழங்க வேண்டும் என, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது.
கன மழை காரணமாக தமிழகத்தின் உள்பகுதிகளில் இருந்து புதுச்சேரியின் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர்வரத்து அதிகரித்தது.
சாத்தனுார் அணையில் இருந்து 2.12 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து பாகூர் பகுதி கிராமங்களை சூழ்ந்தது.
தாழ்வான கிராமங்களான, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கம் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புதுச்சேரி மற்றும் பாகூர் தாலுகாப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 4,168 வீடுகள் பகுதியாகவும், 154 வீடுகள் அதிகளவிலும், 315 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 14,315 மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 975 படகுகள் சேதம் அடைந்தன. தோராயமாக 500 மரங்கள் விழுந்துள்ளன. 1,596 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
52 பள்ளிகள், கல்லுாரிகள் கட்டடங்கள் சேதமடைந்தன. புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ., இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதனால் அரசு துறைகள் தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றன. சேதங்களுக்கான தற்காலிகச் செலவு, அரசு துறைகளால் மொத்தம் ரூ.614.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில துறைகள் விதிமுறைப்படி சேத செலவை குறைத்துள்ளன. அதனால் சேதங்களின் உண்மையான மதிப்பு அதிகமாக உள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய இருப்பு இல்லாததால் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள 614.88 கோடி தொகை புதுச்சேரி அரசுக்கு உடனடியாக தேவைப்படுகிறது.
முன்னுரிமை அடிப்படையில், கால்வாய்களில் துார்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால், பெரும்பாலான உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். இதற்காக 177 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகள் அமைப்பதற்கு ரூ.427.00 கோடியை சிறப்பு நிதியாக அனுமதிக்க வேண்டும்.
அவசரத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கான தற்காலிக கோரிக்கையாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முழு சேதங்கள் குறித்த விரிவான அறிக்கை உரிய காலத்தில் பிரதமருக்கு புதுச்சேரி அரசால் சமர்ப்பிக்கப்படும்.
எனவே, புயல், கனமழை சேதங்களை மதிப்பிடுவதற்கு உடனடியாக மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும்.
நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கான நிதியை புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். முதற்கட்டமாக, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கும் ரூ.600 கோடி வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.