ADDED : ஏப் 19, 2026 04:40 AM
ஆளும் கட்சியினர், தேர்தல் முடிந்த கையோடு, அடுத்த ஆட்சியில் அமைச்சர் பதவியை பிடிப்பதற்கான காய் நகர்த்த துவங்கியுள்ளனர்.
பா.ஜ., தரப்பில் கடந்த முறை போன்றே இரு அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவியை கைப்பற்றி அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். அதேபோல் என்.ஆர்.காங்., கட்சியில், அமைச்சர்களாக இருந்த மூவரில், இருவருக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புதியவர்களுக்கே வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதில், மாநிலத்தில் பிரதான சமுதாயத்திற்கு இம்முறை கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அந்த அமைச்சர் பதவியை கைப்பற்றிட, 5 பேரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதில், கட்சியில் சீனியருக்கா அல்லது, இளைய தலைமுறையினருக்கா என போட்டா போட்டி நிலவுகிறது.
ஆதிதிராவிடர் பிரிவிற்கான அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை பிடித்திட கடந்தமுறை அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தவர் தற்போதே காய் நகர்த்த துவங்கியுள்ளார்.
மூன்றாம் அமைச்சர் பதவி பிராந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட உள்ளது. அது ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகித்த, டில்லியில் செல்வாக்குள்ளவருக்கு வழங்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
