சபாஷ்: பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் : அமைச்சர் நமச்சிவாயம் முன்மாதிரி அறிவிப்பு
சபாஷ்: பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் : அமைச்சர் நமச்சிவாயம் முன்மாதிரி அறிவிப்பு
UPDATED : ஆக 21, 2026 07:27 PM
ADDED : ஆக 21, 2026 06:44 PM
புதுச்சேரி: பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருதில் கொண்டு, தன்னுடைய பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அமைச்சர் நமச்சிவாயம் முன்மாதிரியாக அறிவித்துள்ளார். இதேபோல் மற்ற மக்கள் பிரதிநிதிகள் அறிவித்தால், பேனர் கலாசாரத்தில் சிக்கி பொலிவு இழந்து வரும் புதுச்சேரியின் சாபத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்.
புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உச்சக்கட்டத்தினை எட்டியுள்ளது. பிறந்த நாள், காது குத்து, கல்யாணம், கடை திறப்பு என எதற்கெடுத்தாலும் சட்ட விரோத பேனர்களை சிக்கனல், சாலையில் கொண்டு வந்து வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இவற்றை நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட அகற்றுவது கிடையாது. இதனால், பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தலைதுாக்கிறது. பேனர்களை அகற்ற சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கூட அடி உதை விழும் அளவிற்கு மோசமாகியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், வரும் 8 ம்தேதி பிறந்த நாள் கொண்டாடும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்த நாளுக்கு பொதுமக்களுக்கு இடையூராக எந்த பேனர்களும் வைக்க வேண்டாம் என அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களும் நண்பர்களும் மாநிலம் முழுவதும் பேனர்கள் வைத்து, தொகுதிதோறும் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். இது தொண்டர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வெளிப்பாடாகவும் அமைகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட பேனர்கள் ஏதும் வைக்காமல் கொண்டாட வேண்டும். இந்த பேனர்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயகரமான சூழலும் உள்ளது. வரும் காலங்கள் மழைக்காலங்கள் என்பதால் இது மேலும் அச்சுறுத்தலாக அமையும்.
அது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி அரசும் பேனர்கள் வைக்க தடை சட்டம் இயற்றி அது தற்போது அமலில் உள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி பேனர்கள் எதுவும் கட்டாயம் வைக்காமல், இந்தாண்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும். குறிப்பாக ஏழைமக்களுக்கு அன்னதானம் வழங்குவது, சமபந்தி போஜனம், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் சிறப்பு உணவு வழங்கலாம்.
ஏழை மாணவர்கள் பயன்படும் வகையிலே நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தலாம்.
ரத்ததான முகாம், கண்தானம் மற்றும் உடல் உறுப்புதானம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் நடத்தலாம். மரக்கன்றுகள் நடுவது, ஏழை பெண்களின் திருமணம் மற்றும் சீமந்த நிகழ்ச்சிக்கு உதவலாம்.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் உதவி செய்வது, ஏழை விவசாயிகளுக்கு பசு மாடு தானமாக வழங்குதல். ஏழை தொழிலாளர்களுக்கு தேவையான தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் வழங்கி, ஒரு முன்மாதிரியான விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத பேனர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருதில் கொண்டு, காவல் துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க முடிவு. இதேபோல் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைவர்களும் தங்களுக்கு பிறந்த நாளுக்கு பொதுமக்களுக்கு இடையூராக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவித்தால் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நல்லது...
