/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
22ல் உதவியாளர் பணிக்கான இரண்டாம் நிலை தேர்வு
/
22ல் உதவியாளர் பணிக்கான இரண்டாம் நிலை தேர்வு
ADDED : ஜூன் 20, 2025 02:07 AM
புதுச்சேரி : உதவியாளர் பணிக்கான இரண்டாம் நிலை தேர்வு (22ம் தேதி) நடக்கிறது.
நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான இரண்டாம் நிலைத் தேர்வு வரும் 22ம் தேதி காலை 10:00 முதல் 12:00 மணி வரை, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்வை 10,766 பேர் எழுத உள்ளனர்.
தேர்வு மையத்தின் நுழைவு வாயில் காலை 9:30 மணிக்கு மூடப்படும். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு முன்னதாக வர வேண்டும்.
தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாயிண்ட் பேனா, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், ஹால்டிக்கெட் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி பான் கார்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசல் மட்டுமே கொண்டு வரவேண்டும்.
மொபைல் போன்கள், புளு டூத், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மொபைல், இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்துத் தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட்டினை https://recruitment.py.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வின் போது முறையற்ற வழிகளை பின்பற்றுவது கண்டறியப்பட்டால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தல் மற்றும் எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை உட்பட கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அலுவலக நேரத்தில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் நாளை 21ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.