நகராட்சியில் சர்வர் பிரச்னையால் சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் அவதி
நகராட்சியில் சர்வர் பிரச்னையால் சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் அவதி
ADDED : செப் 15, 2026 09:22 PM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில் தொடரும் சர்வர் பிரச்னையால் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளதால், சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின், நேற்று காலை ஏராளமானோர் சான்றிதழ்களை பெறுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். காலை 9:45 மணியளவில் சர்வர் வேலை செய்யவில்லை.
இதனால், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற அலுவலகத்தில் காத்திருந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2025ம் ஆண்டு நவ., 20ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் பி.டி.ஐ.எஸ்., முறை மூலமும், அதற்கு பின் பிறந்தவர்கள் சி.ஆர்.எஸ்., புதிய இணைய வசதி மூலமும் சான்றிதழ்களை பெற்று வந்தனர். தற்போது இந்த இரண்டு அமைப்புகளையும் இணைக்கும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக சர்வரில் பிரச்னை ஏற்பட்டு சான்றிதழ் வழங்க முடியவில்லை. இப்பிரச்னை 2 நாட்களில் சரியாகிவிடும். பின் வழக்கம்போல் சான்றிதழ் வழங்கப்படும்’ என்றனர்.
இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
