காங்., - நேயம் மக்கள் கழகம் கட்சியினர்... அதிர்ச்சி:த.வெ.க.,விடம் ஆதரவு கேட்ட இ.கம்யூ.,
காங்., - நேயம் மக்கள் கழகம் கட்சியினர்... அதிர்ச்சி:த.வெ.க.,விடம் ஆதரவு கேட்ட இ.கம்யூ.,
UPDATED : செப் 11, 2026 07:15 AM
ADDED : செப் 10, 2026 07:03 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகளில் அடுத்தடுத்த திரைமறைவு நகர்வுகளால் புதுச்சேரி அரசியல் களம் சூடாகியுள்ளது.
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு கொண்டாட்டம், எதிர்க்கட்சிக்குத் திண்டாட்டம் என்பது தான் பார்முலா. ஆனால், புதுச்சேரியின் வி.ஐ.பி., தொகுதியான தட்டாஞ்சாவடியில் தற்போது அரங்கேறி வரும் திரைமறைவு நாடகங்கள், எந்தவொரு சினிமா சஸ்பென்ஸுக்கும் குறைவில்லாத லெவலில் சூடேறியிருக்கிறது.
முதல்வர் ரங்கசாமியின் ராஜினாமாவால் காலியான இந்தத் தொகுதியில், ஆளும் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த் களமிறங்கி ஏற்கெனவே வாக்கு சேகரிப்பில் தீவிரமாகிவிட்டார். இன்னொரு பக்கம், தனித்துப் போட்டியிடும் முடிவோடு, இ.கம்யூ., முன்னாள் பிரமுகரும் சுயேச்சையுமான சேதுசெல்வத்தை திடீர் கார்டு போட்டுத் துாக்கி, வேட்பாளராக அறிவித்துவிட்டது தி.மு.க..
![]() |
முக்கோண குழப்பம்:: ஆனால், உண்மையான 'ஹார்ட் பீட்' எகிறும் இடம் - த.வெ.க, காங்கிரஸ் மற்றும் நேயம் மக்கள் கழகம் அடங்கிய அந்தப் பக்கம் தான். கடந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமி 10,024 ஓட்டுகள் பெற்று வென்றார். ஆனால், த.வெ.க., ஆதரவோடு களம் கண்ட நேயம் மக்கள் கழகத்தின் விநாயகம் பெற்ற ஓட்டுகள் 5,583. வெற்றி வித்தியாசம் வெறும் 4,441 தான் என்பதால், இந்த முறை விநாயகம் மீண்டும் போட்டியிடுவது உறுதி. ஆனால், அவர் எந்தக் கட்சியின் சின்னத்தில் நிற்பார்? என்பதில் தான் மெகா குழப்பம் நீடிக்கிறது.
காங்.: கடந்த முறை டிபாசிட் போனது போகட்டும்; இந்த முறை விநாயகத்தைக் கைக்குள்ளே போட்டு கைச் சின்னத்தில் நிக்க வச்சு, சட்டசபையில் நம்ம பலத்தை ரெண்டாக்கலாம் எனத் திட்டம் போடுகிறது. நாங்களும் சட்டசபையில் எங்களோட பலத்தை இரண்டாக மாற்றணும் என நேயம் மக்கள் கழகமும் போட்டியிட தயாராகிவிட்டது.
சென்னைக்கு வண்டி..: இப்படி எந்த கட்சியில் போட்டியிடுவது என, கையும் நேயமும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இந்திய கம்யூ., தரப்பிலிருந்து எதிர்பாராத மூவ்வினை ஆரம்பித்துள்ளது.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீமும், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதனும் நேராகச் சென்னைக்கு வண்டி கட்டிப் போய், த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்தை நேற்று சந்தித்தனர். நாங்க தட்டாஞ்சாவடியில் நிக்கிறோம். த.வெ.க ஆதரவு வேணும் என, அதிகாரப்பூர்வ கடிதத்தையே கொடுத்துவிட்டு, அப்படியே வி.சி., தலைவர் திருமாவளவனையும் சந்தித்து ஆதரவு கேட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த திடீர் மூவ் காங்., - நேயம் மக்கள் கழகக் கூட்டணியை முற்றிலுமாக அதிர வைத்திருக்கிறது. த.வெ.க., தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவென்றே தெரியாமல் இரு கட்சிகளும் தவித்து வருகின்றன. தலைவரை சந்திக்க நேரம் கிடைக்குமா? என, ஆனந்தின் கிரீன் சிக்னலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் கொடுக்கும் கிரீன் சிக்னல் யாருக்கு? தட்டாஞ்சாவடி தொகுதியில் த.வெ.க, ஆதரவுடன் போட்டியிடப் போவது யார்? புதுச்சேரி அரசியலில் சஸ்பென்ஸ் எகிறிக்கொண்டே போகிறது.
இதெல்லாம் சாமியின் சித்து விளையாட்டு த.வெ.க., விடம் இ.கம்யூ., ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்து வந்து இருக்க கொதித்துபோய் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள், நாங்கதான் இந்தியாவிலேயே த.வெ.க., கூட முதலில் கூட்டணி வச்ச கட்சி. போன முறை நாங்க வாங்கின ஓட்டுகளைப் பார்த்து மிரண்டுபோன ஆளும் கட்சி தான் உச்ச சாமி இதையெல்லாம் பின்னணியில் இருந்து இயக்கி சித்து விளையாட்டு விளையாடுகிறார். நாங்க தளபதி விஜய்யோட முடிவுக்காக காத்திருக்கோம் என, அனல் பறக்கப் பேசுகிறார்கள்.

