ADDED : ஆக 27, 2026 07:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிமை பொருள் வழங்கல் அலுவலக முற்றுகைப் போராட்டம் நேற்று நடந்தது.
இயக்கத் தலைவர் முருகானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ராஜிவ் சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, அவர்களை தன்வந்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அலுவலகம் அருகே பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, ஊர்வலமாக வந்தவர்கள், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மானியத்தை மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக வழங்கும் முறையை கைவிட வேண்டும்; மக்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நேரடியாக வழங்க வேண்டும்; முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்வியறிவு குறைந்த மக்களுக்கு எந்தவிதமான டிஜிட்டல் கட்டாயத்தையும் ஏற்படுத்தக் கூடாது; புதுச்சேரியை மத்திய அரசின் திட்டங்களுக்கான பரிசோதனை கூடமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; என்பன, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
