தட்டாஞ்சாவடி தேர்தல் பிரசாரத்திற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி
தட்டாஞ்சாவடி தேர்தல் பிரசாரத்திற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி
ADDED : செப் 08, 2026 09:00 PM
புதுச்சேரி: பொதுகூட்டம், பேரணி, பிரசாரத்திற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அக்., 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குத் தேவையான பல்வேறு தேர்தல் தொடர்பான அனுமதிகளை விரைவாகவும், வெளிப்படையான முறையிலும் வழங்கிட ‘‘ஒற்றைச் சாளர முறை’’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவை புதுச்சேரி, சாரம், காமராஜ் சாலையில் அமைந்துள்ள திட்டமிடுதல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து விரைவாக பரிசீலிக்கப்படும். அனைத்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சீரான நடைமுறை மற்றும் சமமான வாய்ப்பை உறுதி செய்யப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுந்த பரிசீலனை செய்து முடிவுகளைத் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி:
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறுகையில், ‘பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கான அனுமதி, ஒலிபெருக்கிகள் பயன்பாடு, தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது, தேர்தல் பிரசார வாகனங்களுக்கான அனுமதி, விளம்பரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற அனைத்து வழிகாட்டுதல்களின்படியான அனுமதிகளும் இதன் மூலம் வழங்கப்படும்.
எனவே, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களுக்கான விண்ணப்பங்களை உரிய கால அவகாசத்துடன் முன்னதாகவே சமர்ப்பித்து, முறையான அனுமதிகளைப் பெற்று கொள்ள வேண்டும்’ என்றார்.
