கழிவுநீர் வாய்க்கால் பணி மந்தம் : வியாபாரிகள், மக்கள் அவதி
கழிவுநீர் வாய்க்கால் பணி மந்தம் : வியாபாரிகள், மக்கள் அவதி
ADDED : ஜூலை 03, 2026 03:08 AM

புதுச்சேரி: காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடந்து வரும் ப வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி தடைபட்டதால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி இ.சி.ஆரில் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கணபதிசெட்டிக்குளம் பகுதிகளில் உள்ள 2.6 கி.மீ., நீளத்திற்கு உள்ள ப வடிவ கழிவு நீர் வாய்க்காலை புதுப்பித்தல், விடுபட்ட இடங்களில் மற்றும் 1.3 கி.மீ., துாரத்திற்கு சென்டர் மீடியன் அமைத்தல் மற்றும் ராஜிவ் சதுக்கம் முதல் பிள்ளைச்சாவடி வரை 13 கி.மீ., துாரத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. இப்பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
இந்நிலையில் பெரியகாலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடியில் உள்ள 'ப' வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்க கடந்த மாதம் பள்ளம் தோண்டப்பட்டு, துவங்கிய வாய்க்கால் கட்டுமான பணி என்ன காரணத்தினாலோ கடந்த 15 நாட்களாக முடங்கியுள்ளது. சாலை ஓரத்தில் உள்ள கடைகளை ஒட்டிய பகுதியில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வாய்க்காலுக்கு கான்கரீட் போடப்பட்டுள்ளது. ஆனால், மேல் சிலாப் போடவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்து, பள்ளங்களில் மழை நீர் தேங்கினால், அருகாமையில் உள்ள கடைகள் அனைத்தும் இடிந்து விழும் ஆபத்து உள்ளதால், அப்பகுதி வியாபாரிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வாய்க்கால் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனத்தில் கான்கிரீட் மிக்சர் யூனிட்டில் இயந்திர கோளாறு காரணமாக பணி தடைபட்டுள்ளது. தற்போது இயந்திரங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. அதனால், வாய்க்கால் கட்டுமான பணி விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினர்.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்காத வகையிலும், மழைக்காலம் துவங்கவதற்கு முன்பாக சாலை மற்றும் வாய்க்கால் பணிகள் அனைத்தையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.
