ADDED : ஆக 13, 2025 03:06 AM
புதுச்சேரி : தவளக்குப்பத்தில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி அரசின் மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம், வீட்டு மேற்கூரைகளின் மேல் சோலார் பேனல் நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அறியவும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.
தவளக்குப்பம், சுபமங்கள ஹாலில் காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 வரை முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட்ஸ் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
இதன் மூலம் தற்போது வரை 1,382 நுகர்வோர் சோலார் பேனல்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவியுள்ளனர். இவர்களுக்கு ரூ.9.61 கோடி ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
முகாமில் மக்கள் தவறாமல் பங்கேற்று இந்த திட்ட பயன்களை அறிந்து சேர வேண்டும். இது பற்றி மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற விரும்பினால் மொபைல் 9489080373, 9489080374 மற்றும் ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.