/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆம்னி பஸ்களில் எஸ்.பி., - ஆர்.டி.ஓ., ஆய்வு
/
ஆம்னி பஸ்களில் எஸ்.பி., - ஆர்.டி.ஓ., ஆய்வு
UPDATED : ஜன 14, 2026 06:53 AM
ADDED : ஜன 14, 2026 06:51 AM

புதுச்சேரி: ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள ஆம்னி பஸ்களை போக்குவரத்து எஸ்.பி., ரச்சனாசிங், ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ் ஒன்று, நுாறு அடி சாலை மேம்பாலத்தில் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அதில் பஸ்சிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் வேலை செய்யும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங், ஆர்.டி.ஓ.,கள் ரமேஷ், அங்காளன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் உதவி வட்டார அலுவலர்கள் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் மறைமலை அடிகள் சாலையில் ஆம்னி பஸ்கள் நிற்கும் இடத்தில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பஸ்களில் பேட்டரிகள், முதலுதவி பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், உரிமம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை சரியாக உள்ளதா என, ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பினர்.

