சட்டசபைக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் சபாநாயகர் அன்பழகன் பேச்சு
சட்டசபைக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் சபாநாயகர் அன்பழகன் பேச்சு
ADDED : ஆக 19, 2026 06:02 PM
புதுச்சேரி: சட்டசபை செயலகத்துக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் என, சபாநாயகர் அன்பழகன் பேசினார்.
புதுச்சேரி சாரம் சிவகவி ஓட்டலில் நேற்று எம்.எல்.ஏ.,களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. முகாமில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசியதாவது:
புதுச்சேரி பிரதேசமாக உள்ளதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டசபையில் அறிவிக்கும் பல முக்கியமான பிரச்னைகள் கூட கிடப்பில் போடப்படுகிறது. நம் சட்டசபை செயலகத்துக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாம் வலியுறுத்த வேண்டும்.
சமீப காலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாத பல்வேறு பிரச்னைகளில் கூட நீதிமன்றங்கள் தலையிட்டு வருகின்றன. நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்ட செயலகம் இவை எல்லாம் தனித்தனி சுதந்திரமான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தாக உள்ளன.
ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் குறுக்கீடுகள் நிர்வாகத்துறையில் அவ்வப்போது அதிகம் ஏற்படுவதால் அரசின் கொள்கை முடிவுகளை கூட செயல்படுத்த முடியாத ஒரு தேக்க நிலை ஏற்படுகிறது. மக்கள் பிரதிதிநிகள் நாம் இந்த விஷயத்திலும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நிலை நிறுத்த வேண்டும்.
ஒரு எம்.எல்.ஏ., உரை நிகழ்த்தும்போது வேறு எந்த எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு இடைஞ்சல் ஏற்படும் விதத்தில் செயல்பட கூடாது.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் பட்ஜெட் வாசிக்கும் போது உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமது செயல்பாடுகள் அனைத்தும் மக்களுடைய கவனத்திற்கு உட்பட்டது. சட்டசபையின் கண்ணியத்தையும், மாண்புகளையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்கள் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
